கோலாலம்பூர், பிப்ரவரி.11-
மலேசியக் கல்வி அமைச்சின் புதிய 'பள்ளிப் பாடத் திட்டம் 2027'-இன் கீழ், ஆரம்பப் பள்ளி அளவில் வரலாறு பாடம் இனி 5 மற்றும் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே போதிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி-பதில் அங்கத்தின் போது கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ வழங்கினார்.
அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள இந்தப் புதிய பாடத்திட்டம், முதலாம் ஆண்டு மற்றும் படிவம் 1 மாணவர்களிடமிருந்து தொடங்கப்படும். உயர்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை, வரலாறு பாடம் வழக்கம் போல படிவம் 1 முதல் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் வரலாறு பாடத்தை 5 மற்றும் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுப்படுத்துவது குறித்த ஊடக அறிக்கைகளுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் கல்வி அமைச்சு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.








