கோலாலம்பூர், மார்ச்.02-
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலுக்கு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்தாக்குதலானது சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான விதிமுறை மீறல் என்றும் அன்வார் சாடினார்.
அமெரிக்கா மற்றும் சியோனிச ஆட்சியின், ஈரான் மீதான தாக்குதலை, மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு என்று குறிப்பிட்டுள்ள அன்வார், அவர்களுடன் என்ன வேறுபாடுகள் இருந்தாலும், நடத்தப்பட்ட தாக்குதலானது சர்வதேச ஒழுங்கமைப்பிற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர நாடான மலேசியா, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகள் அனைத்தும் ஆக்கபூர்வமான முறையில் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் மாறாக அவை போராக உருமாறக் கூடாது என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் நடந்த 12 நாட்கள் தொடர் வான் வழித் தாக்குதலுக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் ஈரானின் மூத்த தலைவர் Ayatollah Ali Khamenei கொல்லப்பட்டதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு தேசிய ஊடகங்கள் உறுதிப்படுத்தின.








