Aug 12, 2026
Thisaigal NewsYouTube
உணர்ச்சிகரமான விவகாரங்களுடன் விளையாடாதீர்
தற்போதைய செய்திகள்

உணர்ச்சிகரமான விவகாரங்களுடன் விளையாடாதீர்

Share:

கோலாலம்பூர், மே.30-

உணர்ச்சிகரமான விவகாரங்களை எழுப்பி நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமயத்தை முன்நிறுத்தி, அவதூறான தகவல்களைப் பரப்பி வரும் தரப்பினர் தங்கள் செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியா பல்லின மற்றும் பல சமயத்சைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்ற ஒரு நாடாகும். அவதூறு தன்மையில் சமயம் சார்ந்த விவகாரங்களை எழுப்பும் தரப்பினர், மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தம்முடைய பிகமிங் ஹான்னா: ஏ பெர்சனல் ஜேர்னி என்ற நூலைச் சமயத்துடன் தொடர்புப்படுத்தி, அவதூறு தன்மையில் பேசிய தரப்பினருக்கு எதிராக சிகாம்புட் எம்.பி.யான ஹான்னா இயோ தொடுத்திருந்த வழக்கில் அந்த பெண் எம்.பி. இன்று வெற்றி பெற்றது குறித்து கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்

அந்த நூல் தொடர்பாக ஹான்னா இயோவிற்கு எதிராக அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வட மலேசிய பல்கலைக்கழக முதிர் நிலை விரிவுரையாளர் டாக்டர் கமாருல் ஸாமான் யுசோப் என்பவர் இழப்பீட்டுத் தொகையாக 4 லட்சம் ரிங்கிட்டையும், வழக்கு செலவுத் தொகையாக 80 ஆயிரம் ரிங்கிட்டையும் வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அந்த நூல் மூலம் ஹன்னா இயோ மலேசியாவை ஒரு கிறிஸ்துவ நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார் என்று அந்த விரிவுரையாளர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஹன்னா இயோ, அவதூறு வழக்கு தொடுத்து இருந்தார்.

Related News