குனுங் பத்து புத்தே மலையில் மாயமான ஜாஸ்லிண்டா சாலுடின்-ஐக் கண்டறியும் மீட்பு நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டாலும் கூட, தங்களால் முடிந்தவரை தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி எடுத்துள்ளனர்.
தேடுதல் நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளரும், பேராக் மாநில மந்திரி பெசாரின் ஓராங் அஸ்லி விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியுமான சியூ ஹோ பெங் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
அதன் படி, 22 செமாய் தன்னார்வலர்களைக் கொண்ட குழு, கடந்த மே 24-ஆம் தேதி காணாமல் போன ஜாஸ்லிண்டாவைக் கண்டுபிடிக்கப்படக்கூடிய அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் ஆராய்ந்து வருகின்றனர்.
குறிப்பாக கெம் சுகானேகா மற்றும் குனுங் ராயு பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக சியூ ஹோ பெங் குறிப்பிட்டுள்ளார்.
தேடுதல் நடவடிக்கைகளின் போது சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் தங்களது அனுபவத்தின் அடிப்படையில், காணாமல் போன ஜாஸ்லிண்டா அப்பகுதிகளிலேயே இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








