ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு தற்போது புதிய மாநிலத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், நாட்டை நிர்வகிக்கும் கடமைகளை நிறைவேற்றுவதிலேயே ஒற்றுமை அரசாங்கத்தின் முழு கவனமும் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்று வரும் 'எரிசக்தி மாற்ற மாநாடு 2026' நிகழ்ச்சியின் மத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார், 16-வது பொதுத்தேர்தலானது, ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் ஒரே காலக்கட்டத்தில் நடத்தப்படும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற ஊகங்களை முற்றிலும் நிராகரித்தார்.
ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது அம்மாநில அரசாங்கத்தின் முடிவு என்றும், தாங்கள் நாட்டின் நிர்வாகத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூர் மாநில சட்டமன்றமானது கடந்த ஜுன் 1-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டதாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி-ஆல் அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் அடுத்த 60 நாட்களுக்குள் 16-ஆவது மாநிலத் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில், மொத்தம் 56 தொகுதிகளில் போட்டியிடப்பட்ட நிலையில், பாரிசான் நேஷனல் 40 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மை வெற்றியைப் பெற்றது.
அதேவேளையில், பகாதான் ஹராப்பான் 12 தொகுதிகளையும், பெரிகாத்தான் நேஷனல் 3 தொகுதிகளையும், மூடா 1 தொகுதியையும் கைப்பற்றின.
இந்நிலையில், 16-வது பொதுத் தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்படக்கூடும் என்ற அரசியல் ஊகங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களுடன் ஒரே காலகட்டத்தில் நடத்தப்படலாம் என்ற பேச்சுவார்த்தைகளும் நிலவி வருகின்றன.
என்றாலும், தற்போதைய அரசியலமைப்பு காலக்கெடுவின்படி, 16 -வது பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய இறுதி காலவரம்பு 2028-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும்.








