எதிர்க்கட்சித் தலைவரான ஹம்சா ஜைனுடின் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த பதவி காலியாக இருப்பதை அறிவிக்கும் அதிகாரப்பூர்வக் கடிதமானது நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெரிகாத்தான் நேஷனல் தலைவர் அகமட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.
இன்றோ அல்லது நாளையோ அக்கடிதமானது நாடாளுமன்றத்தில் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இன்று வெள்ளிக்கிழமை திரங்காணு மாநில பாஸ் கட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற ஹரி ராயா திறந்த இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகமட் சம்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பதவிக்காக பல தரப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதையும் அகமட் சம்சூரி சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்த விண்ணப்பங்களை தாங்கள் மதிப்பாய்வு செய்து வருவதாகவும், அவற்றின் அமைப்பு மற்றும் சமர்ப்பிப்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ள கூடுதல் விவரங்களையும் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, பின்னர் உயர் மட்ட தலைமைக்குழு கூட்டத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.








