ஜோகூர் பாரு, ஜூலை.14-
மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி, கட்டாயத் தொழிலாளர்களாகப் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக நம்பப்படும் வயது குறைந்த இருவர் உட்பட மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில் இந்த மோசடிக் கும்பல் தொடர்பில் 17 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய 7 பெண்கள், இரண்டு ஆண்களை உள்ளடக்கிய ஒரு கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேரைப் போலீசார் கைது செய்துள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
கடந்த ஜுன் 20 ஆம் தேதிக்கும் இம்மாதம் முதல் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்டச் சோதனையில் இந்தக் கும்பல் பிடிபட்டதாக டத்தோ குமார், தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களின் கணக்குகளைப் பயன்படுத்தி, இந்தக் கும்பல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. கவர்ச்சிகரமானப் பெண்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, வயது குறைந்தவர்களுடன் வீடியோ அழைப்பில் பேசி, தங்களின் வலையில் சிக்க வைத்துள்ளனர் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று டத்தோ குமார் தெரிவித்தார்.








