கோத்தா பாரு, பிப்ரவரி.05-
கடந்த 2013-ஆம் ஆண்டு Tahfiz பள்ளி ஒன்றில் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் மாணவர் வான் அஹ்மாட் ஃபாரிஸ் வான் அப்துல் ரஹ்மான் மரணம் குறித்த மறுவிசாரணையை போலீசார் நிறைவு செய்துள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட விசாரணை ஆவணங்களைப் பெற்று விட்டதாக சட்டத்துறை அலுவலகமான AGC உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்த விசாரணை ஆவணங்களை ஆய்வு செய்ய இரண்டு வார கால அவகாசம் தேவை என்றும் AGC குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 20-ஆம் தேதி, இந்த வழக்கை விரைவில் மறுவிசாரணை செய்யுமாறு AGC வலியுறுத்தியதையடுத்து, போலீசார் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, அந்த நான்காம் படிவ மாணவரின் மரணம் தொடர்பான மறுவிசாரணையின் ஒரு பகுதியாக, 68 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்தார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு, டிசம்பர் 14-ஆம் தேதி, கிளந்தான், கோக் லாமாக் உள்ள Maahad Tahfiz Sains Nurul Aman பள்ளியின் விடுதி கழிப்பறையில் அம்மாணவர் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








