தற்போதைய சூழலில் இந்த உலகம் எதிர்கொண்டு வரும் முக்கியப் பிரச்சினைகளுக்கு காரணம் அதிகாரப் பற்றாக்குறை அல்ல, மாறாக தெளிவான தலைமைத்துவத்தின் பற்றாக்குறையே என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டிற்கு 3 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அன்வார், டோக்கியோ நகரில் இன்று 'ஆசியாவின் எதிர்காலம் - உத்திசார் நிச்சயமற்ற தன்மையைக் கையாளுதல்' என்ற தலைப்பிலான 31-வது நிக்கேய் கருத்தரங்கில் உரையாற்றினார்.
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் சவால்களை சமாளிக்க உலக நாடுகள் மீண்டும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அன்வார் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலையில் திறமையான தலைமைத்துவத்திற்கு தெளிவான திசையறிந்து செயல்படும் உணர்வு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பண்டைய கால மாலுமிகளால் ஒவ்வொரு புயலையும் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை, கடல் நீரோட்டங்களையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆனால் அவர்களிடம் தெளிவான திசை உணர்வு இருந்தது என்று அன்வார் விளக்கமளித்துள்ளார்.
அந்தவகையில், உலகத்திற்கு தற்போது அதிகாரத்திற்குப் பஞ்சமில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தலைவர்களிடம் திசையறிந்து செயல்படும் உணர்வு இல்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளையில், நிறுவனங்கள் எளிதில் கைவிடப்படுவதை விட அவை சீர்திருத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அன்வார், பிளவுகளை விட ஒத்துழைப்பும், விரக்தியை விட செயல்முறையிலான தலைமைத்துவமும் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கொள்கைகளைப் பின்பற்றினால் இன்றைய சவால்களை நாளைய வாய்ப்புகளாக மாற்ற முடியும் என்றும் அன்வார் அக்கருத்தரங்கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








