பிரதமர் துறையின் சட்டம், சட்ட சீர்திருத்திற்கான துணை அமைச்சராக தாம் நியமிக்கப்பட்டது குறித்து வருத்தமோ, ஏமாற்றமோ இல்லை என்று டிஏபி உதவித் தலைவர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் மனித வள அமைச்சராக ஒரு முழு அமைச்சுக்கு பொறுப்பேற்று இருந்த நிலையில், தற்போது துணை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஈப்போ பாராட் எம்.பி.யான குலசேகரன் குறிப்பிட்டார்.
அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவி முக்கியம் அல்ல. வழங்கப்பட்ட பதவியின் மூலம் எத்தகைய ஆற்றலை நம்மால் வெளிப்படுத்த முடியும் என்பதே முக்கியம் என்று குலசேகரன் குறிப்பிட்டார்.
மேலும் துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பது, கட்சியின் முடிவாகும். கட்சி உறுப்பினர் என்ற முறையில் கட்சி எடுக்கக்கூடிய முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அதனையே தாம் செய்துள்ளதாக குலசேகரன் விளக்கம் தந்துள்ளார்.








