ஷா ஆலாம், பிப்ரவரி.19-
ஷா ஆலம், செக்சன் 7-இல் உள்ள ஒரு வீட்டிற்குள் பெண் உடை அணிந்து புகுந்த மர்ம நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இது குறித்து ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்சே எம்போல் கூறுகையில், தான் விடுமுறைக்குச் சென்றிருந்த போது தனது வாடகை வீடு உடைக்கப்பட்டதாக பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை புகார் அளித்ததாகத் தெரிவித்தார்.
"பயணத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய அந்தப் பெண், வீட்டின் முன் கதவு திறந்திருப்பதையும், உள்ளே பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, புதன்கிழமை காலை 9.26 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தது தெரிய வந்தது. அந்தக் காட்சிகளில், சந்தேக நபர் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக, முக்காடு அணிந்து, கையில் ஒரு கைப்பையையும் ஏந்தி பெண் போல வேடமிட்டிருந்தது தெரிய வந்தது.
வீட்டிலிருந்து எந்தப் பொருட்களும் திருடப்படவில்லை என்று ஏசிபி ரம்சே தெரிவித்தார். தற்போது அந்த மர்ம நபரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.








