கோலாலம்பூர், பிப்ரவரி.27-
கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவரிடம் போலீஸ் துறையினர் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில் உண்மை ஏதுமில்லை என செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ரொஸ்டி டாவுட் தெளிவுப்படுத்தியுள்ளார்.
Jalan Persiaran Jalil Utama பிரதான சாலையில் நான்கு போலீஸ் அதிகாரிகள் கார் ஓட்டுநர் ஒருவரைச் சூழ்ந்து நிற்பது போன்ற காட்சிகள் டிக் டாக் தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பெயரும் இணைக்கப்பட்டிருந்ததால், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ரொஸ்டி டாவுட் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை நான்கு அதிகாரிகள் குற்றத்தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததற்காக அந்த கார் ஓட்டுநருக்கும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்திற்கும் அதிகாரிகள் சம்மன் வழங்கினர். பின்னர் வாகனத்தை அங்கிருந்து நகர்த்தும்படி அறிவுறுத்தப்பட்டது.
ஓட்டுநரின் விவரங்களைச் சரிபார்த்த பிறகு, குற்றச் செயல்கள் குறித்து போலீஸ் துறைக்குத் தகவல் தெரிவிக்க உதவும் 'Volunteer Smart Phone Patrol' எனும் VSP செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கார் ஓட்டுநருக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
களத்தில் பணியாற்றும் போலீஸ் துறை அதிகாரிகளின் கடமைகள் குறித்து தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய யூகங்களை மக்களிடையே பரப்ப வேண்டாம் என்று ரொஸ்டி டாவுட் கேட்டுக் கொண்டார். மேலும், போலீஸ் துறையின் நேர்மையையும் பொதுமக்களின் நலனையும் காப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.








