ஜாசின், பிப்ரவரி.05-
பள்ளிப் பேருந்து ஒன்றில் இரண்டாம் படிவம் பயிலும் மாணவன் ஒருவனுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் 50 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மலாக்கா, ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த நபரை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீஸ் துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 3 மணியளவில் மற்ற மாணவர்களை இறக்கி விட்ட பிறகு, பாதிக்கப்பட்ட மாணவன் மட்டும் பேருந்தில் தனியாக இருந்த போது, அந்த ஓட்டுநர் ஒரு வீடமைப்புப் பகுதியில் பேருந்தை நிறுத்தி விட்டு பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட அவரது தாயார், விசாரித்த போது இச்சம்பவம் குறித்து தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் நேற்று புதன்கிழமை இரவு ஜாசின், Keseng போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.








