தெமர்லோ, பிப்ரவரி.14-
தெமர்லோ, தாமான் துவாலாங் இண்டா எரிபொருள் நிலையத்திற்கு அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், கார் தீப்பிடித்ததில் பயணம் செய்த தம்பதியினர் உயிரிழந்தனர்.
தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் நாஷிம் பாஹ்ரோம் கூறுகையில், அதிகாலை 1 மணியளவில் பொதுமக்களிடமிருந்து இது குறித்த தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையின்படி, கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நோக்கிச் சென்று கொண்டிருந்த புரோட்டான் பிரேவி காரின் பின்புறம், போர்ஷே Cayenne ரக சொகுசு கார் மோதியுள்ளது.
இந்த மோதலின் வேகத்தில் இரண்டு வாகனங்களும் சாலையோரத்திற்குத் தூக்கி வீசப்பட்டன. அப்போது புரோட்டான் பிரேவி கார் தீப்பிடித்ததில், அதிலிருந்த 34 மற்றும் 35 வயதுடைய தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். போர்ஷே காரைச் செலுத்திய 28 வயது இளைஞர் கையில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய இளைஞர் மதுபோதையில் கார் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அவர் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.








