கெப்பால பாதஸ்,ஜூலை 03-
ஸ்.பி.ம் தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டம் அல்லது பொது பல்கலைக்கழகத்திற்கான அடிப்படை கல்வித் திட்டத்தில் வாய்ப்பு வழங்குவதற்கு அரசாங்கம் அளித்துள்ள உத்தரவாதம் நிலைநாட்டப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அளித்துள்ள உத்தரவாதத்திற்கு ஏற்ப சிறப்பான அடைவு நிலையைப்பெற்ற எந்தவொரு மாணவரும் உயர் கல்விக்கான தேசிய நீரோடையில் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு உயர் கல்வி அமைச்சு உறுதி அளிப்பதாக ஜம்ரி குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு இது போன்ற வாய்ப்பு கிட்டாமல் இருந்திருக்கலாம். அதற்காக கவலை வேண்டாம். அரசாங்கத்தின் அறிவிப்புக்கு பிறகு சிறந்த அடைவு நிலையைக் கொண்ட மாணவர்களுக்கு அவர்களின் பின்னணி ஆராயமல் உரிய முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் மறு உறுதிப்படுத்தியுள்ளார். .








