சிரம்பான், பிப்ரவரி.03-
கல்வி அமைச்சு வரும் மார்ச் மாதம் முதல் மேற்கொள்ளவிருக்கும் 20,000 ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களின் நியமனம், ஏற்கனவே காத்திருப்புப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கான வாய்ப்புகளைப் பாதிக்காது என்று கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.
தகுதியுள்ள காத்திருப்புப் பட்டியல் வேட்பாளர்களைப் பணிக்கு அமர்த்துவது குறித்து கல்விச் சேவை ஆணையத்துடன் ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, ஆனால் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், அவர்கள் நிரந்தரப் பணியில் இணைவதற்கான வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்குச் சூழலைப் பொறுத்து நல்ல வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள் அல்லது அவர்களின் பாடத் தேர்வுகளுக்கு ஏற்பப் பணியமர்த்தப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.
இன்று சிரம்பானில் செம்பிலான் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு 'ஸ்மார்ட் போர்டு' (Smart Board) சாதனங்களை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, கல்வித் தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் அஸாம் அஹ்மாட் கூறுகையில், நாடு முழுவதும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க 20,000 ஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 2 முதல் 20 வரை திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மாபெரும் ஆசிரியர் நியமன நடவடிக்கை, 2026-2035 மலேசிய கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு தயாரிப்புப் பணியாகும். மேலும், அடுத்த ஆண்டு முதல் ஆறு வயதுக் குழந்தைகள் விருப்பத்தின் பேரில் முதலாம் ஆண்டில் சேரவிருப்பதால் ஏற்படும் மாணவர் அதிகரிப்பை ஈடுகட்டவும் இது உதவும் என்று வோங் கா வோ விளக்கினார்.
இன்றைய நிகழ்வில், நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த 45 தமிழ்ப்பள்ளிகளுக்கு தலா ஒரு 'ஸ்மார்ட் போர்டு' வீதம், மொத்தம் 540,000 ரிங்கிட் மதிப்பிலான சாதனங்கள் வழங்கப்பட்டன.








