ஜனா விபாவாவின் கீழ் திட்டங்களை வழங்குவதில், முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிதீன் யாசின் எவ்வித தலையீடும் செய்யவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
முஹிதீன் யாசின் மீதான முறைகேடு மற்றும் பணமோசடி வழக்கு விசாரணையில், அரசுத் தரப்பு முக்கிய சாட்சியாகப் பங்கேற்ற தெங்கு ஜஃப்ருல், ஒப்பந்ததாரர் மதிப்பீட்டு குழுவின் பணிகளிலோ அல்லது இறுதி ஒப்புதல் செயல்முறைகளிலோ முஹிதீன் தலையிடவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.
கோவிட்-19 காலகட்டத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பூமிபுத்ரா ஒப்பந்ததாரர்களுக்கு உதவவுமே இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இதில் முஹிதீனுக்கு தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த ஆதாயங்கள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்தார். இவ்வழக்கின் விசாரணை நாளை தொடர்கிறது.








