மலாக்கா, டூரியான் துங்கலில் கடந்த நவம்பரில் போலீஸ் துறை சுட்டுக் கொன்ற மூன்று நபர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் முக்கியத் தடயங்கள் விடுபட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜன் மற்றும் சச்பிரீத்ராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளனர்.
காயங்களின் வரைபடங்கள் மற்றும் தடயவியல் மறுவடிவமைப்பு போன்ற விவரங்கள் இல்லாத இந்த அறிக்கை, அனைத்துலக தரத்திற்கு மிகக் கீழ்மட்டமாக உள்ளதாக அவர்கள் சாடினர். மிக நெருங்கிய தூரத்திலிருந்து, கீழ்நோக்கிய திசையில் குண்டுகள் பாய்ந்துள்ளதால், இது சுயபாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல என்றும், முழங்காலிட்ட அல்லது படுத்திருந்த நிலையில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட போலீஸ் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இவ்வழக்கை ஒரு சுயேட்சை அமைப்பு விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








