கோலாலம்பூரில் மொத்தம் 163 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அரசு நிலங்களில் அமைந்துள்ளதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு முறையான மற்றும் நியாயமான முறையில் தீர்வுகாண அரசு தீவிரம் காட்டி வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் 11 துணைக் குழுக்கள் அமைக்கப்படும்.
இக்குழுக்கள் இந்து, பௌத்த, கிறிஸ்தவ, சீக்கிய மற்றும் தாவோயிச அமைப்புகளுடன் இணைந்து ஆலோசனைகளை நடத்தும் என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
இன்று கோலாலம்பூர் பகுதியில் உள்ள முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத்தலங்களின் பொறுப்பாளர்களுடன் நடத்திய சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஹன்னா இயோ இதனை தெரிவித்தார்.
அரசு நிலத்திலுள்ள வழிபாட்டுத் தலங்கள் குறித்து நாடாளுமன்றத் தொகுதி வாரியாக வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. சமுதாயத் தேவைகளையும் சட்ட விதிகளையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் மிகவும் கவனமாக கையாளப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.








