மலாக்கா, டிசம்பர்.14-
மலாக்கா டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, மலாக்கா காவற்படை தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது குறித்து தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையைப் பதிவுச் செய்துள்ளனர். மலாக்கா மாநிலக் காவற்படைத் தலைவர் ஸுல்கைரி முக்தார், தன்னிச்சையாக தனிப்பட்ட பின்னணியையும் குடும்ப விவகாரங்களையும் திரித்துக் கூறுவது, புக்கிட் அமான் சிறப்புப் படை விசாரணை முடிவதற்கு முன்பே ஒருதலைபட்சமான பொதுக்கருத்தை உருவாக்க முயல்வது போல் தெரிகிறது என தேசியக் கூட்டணியின் தலைமை கொறடா தக்கியுடின் ஹசான் குற்றம் சாட்டியுள்ளார்.
வேண்டுமென்றே தகவல்களை வெளியிடுவது, சாட்சிகள் அல்லது தொடர்புடைய நபர்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, விசாரணையின் நம்பகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தினார். சட்ட அமலாக்க நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் எப்போதும் உறுதிச் செய்யப்பட வேண்டும் என்றும், குறிப்பாக உயிர்கள் பறிபோகும் விவகாரங்களில் மிக உயர்ந்த அளவிலான பொறுப்பேற்றல் அவசியம் என்றும் தேசியக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. அனைத்துத் தகவல்களும் சந்தேகத்திற்கு இடமின்றி, பக்கச்சார்பற்ற தன்மையுடனும், தொழில்முறை தரங்களுடனும் இருக்க வேண்டும் என்றும், இதன் மூலம் காவற்படையின் மீதான பொது நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








