ஷா ஆலாம், ஜூலை.31-
சிலாங்கூர் மாநிலத்தில் 3 மாவட்டங்களில் நாளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஸ்மார்ட் பார்க்கிங் முறை அமல்படுத்தப்படவிருக்கிறது.
ஷா ஆலம் மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும் செலாயாங் நகராண்மைக் கழகம் ஆகியவையே அந்த மூன்று இடங்களாகும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இத்திட்டம் முதலில் மூன்று மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் இத்திட்டத்தின் அமலாக்கத்தை ஒத்தி வைத்துள்ளது என்று சிலாங்கூர் மாநிலத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான விவசாய மக்கள் தொகை கணக்கெடுப்பு இடைக்கால அறிக்கையை வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநிலத்தில் செயல்திறன் மற்றும் மாநில வருவாயை அதிகரிக்க பல மாநகர் மன்றங்கள் மற்றும் நகராண்மைக் கழகங்கள் இந்த ஸ்மார்ட் பார்க்கிங் முறையை செயல்படுத்துவது தொடர்பாக மாநில அரசு தொடர்ந்து விவாதித்து வருவதாக அமிருடின் தெரிவித்தார்.
இதில், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் இந்த திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். நாளை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 1 முதல் ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூலம் பார்க்கிங் கட்டண வசூலைச் செயல்படுத்த ரந்தாயான் மெஸ்ரா சென்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டது.








