நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருணுக்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோ மீட்டதைத் தொடர்ந்து, அங்கு அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது. இது குறித்து மாநில ஆட்சியாளர் துங்கு முக்ரிஸைச் சந்தித்து விளக்கமளிக்க அனுமதி கோரியுள்ளதாக மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்தார்.
மதம், இனம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான விவகாரங்களில் மாநில அரசு முறையாகச் செயல்படவில்லை என்பதே இந்த முடிவுக்குக் காரணம் என்று ஜலாலுடின் அலியாஸ் கூறினார். மேலும், அம்னோவைச் சேர்ந்த அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களின் அரசு வாகனங்கள் மற்றும் அலுவலகங்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
36 இடங்களைக் கொண்ட நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில், 14 இடங்களைக் கொண்டுள்ள பாரிசான் நேஷனல் விலகினாலும், மந்திரி புசார் பதவியில் நீடிக்குமாறு அமினுடின் ஹருணுக்கு ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் இது ‘கொல்லைப்புற வழியாக அரசாங்கம் அமைக்கும் முயற்சி அல்ல என்றும், மாநில நிர்வாகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை என்றும் ஜலாலுடின் தெளிவுபடுத்தினார்.








