கோலாலம்பூர், நவம்பர்.06-
நாடாளுமன்றத்தில் புத்திசாலித்தனமானக் கேள்விகளைக் கேளுங்கள். நான் அவற்றுக்கு பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, இன்று மக்களவையில் பாசீர் மாஸ் எம்.பி. அஹ்மாட் ஃபாட்லி ஷாரியைக் கடிந்து கொண்டார்.
மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தில் நாட்டின் "டிஜிட்டல் சாவிகளை" ஒரு வெளிநாட்டுச் சக்தியிடம் திறம்பட ஒப்படைத்து விட்டதாக பாசீர் மாஸ் எம்.பி. அஹ்மாட் ஃபாட்லி ஷாரி முன் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் அவரை கோபிந்த் சிங் கண்டித்தார்.
பாசீர் மாஸ் எம்.பி. அஹ்மாட் ஃபாட்லி ஷாரி, இத்தகையக் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னதாக ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களைக் கவனமாகப் படிக்குமாறு கோபிந்த் வலியுறுத்தினார்.
“நாங்கள் நாட்டிற்குச் சிறந்ததைச் செய்ய முயற்சிக்கிறோம். எனவே ஆவணத்தை முழுமையாகப் படித்து, புத்திசாலித்தனமானக் கேள்விகளைக் கேளுங்கள். அப்போதுதான் உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க முடியும்," என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
மலேசியாவில் AI செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை ஆதரிப்பதற்கான குறிப்பிட்ட உட்பிரிவுகள் அமெரிக்காவுடனான அந்த ஒப்பந்தத்தில் இல்லை என்று அஹ்மட் ஃபாட்லி குற்றஞ்சாட்டினார்.
அந்த ஒப்பந்தத்தினால் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு அமெரிக்காவின் ஒப்புதலை மலேசிய பெற வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
2030 ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை AI- நுட்பத்தில் உந்துதல் பெற்ற நாடாக மாற்றுவதற்கு அரசாங்கம் உண்மையிலேயே உறுதி பூண்டுள்ளதா? அப்போது அமெரிக்காவுடனான ஒப்பந்ததில் உள்ள சில விதிகள் நமது டிஜிட்டல் சாவிகளை வேறொரு நாட்டிடம் ஒப்படைத்து மலேசியாவை ஒரு சோதனை மையமாக மாற்றுமா? என்று அஹ்மாட் ஃபாட்லி கேள்வி கேட்ட போது, அதன் உள்ளடக்கத்தை முழுமையாகப் படித்து விட்டு புத்திசாலித்தனமாகக் கேள்விகளைக் கேளுங்கள் என்று அந்த பாஸ் எம்.பி.க்கு கோபிந்த் சிங் அறிவுறுத்தினார்.








