ஒரு பெண்ணைச் சட்டவிரோதமாகச் சிறைப்பிடித்து, தாக்கி, பணம் பறித்ததோடு, மட்டுமல்லாமல் அவரை நிர்வாணமாகக் காணொளி எடுத்த வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜொகூர், பத்து பகாட், தாமான் பனாங் ஹைட்ஸ் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றம் புரிந்ததாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட 33 வயது பெண், குற்றம் நடந்த அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மற்றொரு வீட்டில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஆடைகளைக் களையும்படி கட்டாயப்படுத்தப்பட்டு பின் நிர்வாணமாகக் காணொளி எடுக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, அவரிடமிருந்து 4,200 மலேசிய ரிங்கிட் பணமும் ஒரு கைப்பேசியும் பறிக்கப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, முகமது சலேஹுதீன் அலி என்ற அந்நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. மேலும், இரு பெண்களில் ஒருவருக்குக்கு இரண்டு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, மற்றொருவருக்கு 2,000 மலேசிய ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.








