கோலாலம்பூர், ஏப்ரல்.05-
கோலாலம்பூர், ஜாலான் கிள்ளான் லாமா பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்குச் சாலையின் எதிர்த்திசையில் ஆபத்தான முறையில் கார் ஓட்டிய நபரை காவற்படை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இன்று காலை 9:44 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த 40 விநாடி காணொலி சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் உதவி ஆணையர் முஹமட் ஸம்ஸுரி முஹமட் இசா தெரிவித்தார். ஜாலான் செபாடு சந்திப்பிலிருந்து ஜாலான் கூச்சாய் லாமா சந்திப்பு வரை அந்த கார் எதிர்த்திசையில் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுவரை இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்றாலும், தீவிரமாகப் பகிரப்பட்டக் காணொலியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநரையும் வாகனத்தையும் கண்டறியும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள் காவற்படைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.








