பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும், வரும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தைவிட மக்களின் எதிர்பார்ப்பு, அவர்களின் அபிலாஷைகளுக்கு அதீத முன்னுரிமை அளிக்கக்கூடியவரான மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் இம்மாதம் இறுதியில் நாட்டின் 17 ஆவது மாமன்னராக பொறுப்பேற்கவிருப்பதால், அரசாங்கத்தை கவிழ்க்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த சில அரசியல் தரகர்களின் திட்டம், எதிர்பார்ப்பு தவிடு பொடியாகலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வரும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு எதிர்க்கட்சியினர், அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியிலும் ஈடுபட மாட்டார்கள். அத்தகைய முயற்சிகள் மேற்கொண்டால் என்ன நடக்கும், எத்தகைய விபரீதம் ஏற்படும் என்பதை அவர்களை அறிந்து வைத்துள்ளனர். எனவே மிக உஷராக இருக்கின்றனர் என்று Kini TV க்கு அளித்த பேட்டியில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், அரசியல் ஆய்வாளரான டாக்டர் அப்துல் முக்கிட் முஹமாட் மேற்கண்டவாறு கூறினார்.
அண்மையிலா ஐக்கிய அரசு சிற்றரசு தலைநகரில் நடந்ததாக கூறப்படும் துபாய் நகர்வில், அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி தோல்விக் கண்டதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு யாரும் இத்தகைய விஷப் பரீட்சையில் இறங்க மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக டாக்டர் அப்துல் முக்கிட் குறிப்பிட்டுள்ளார்.








