2025-ஆம் ஆண்டுக்கான சிஜில் பெலஜாரான் மலேசியா எனப்படும் SPM தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு தேர்வு முடிவுகள் மேம்பட்டுள்ளதாக தேசிய கல்வி இலாகா அறிவித்துள்ளது.
தேசிய சராசரி தரக் குறியீடு GPK- ஆனது 4.42 ஆக பதிவாகி, கடந்த 2024-ஆம் ஆண்டின் 4.49 உடன் ஒப்பிடுகையில் சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் 13 ஆயிரத்து 779 தேர்வர்கள் அனைத்து பாடங்களிலும் A+, A மற்றும் A- தரங்களைப் பெற்று சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளனர்.
இது கடந்த 2024-ஆம் ஆண்டின் 13 ஆயிரத்து 827 பேருடன் ஒப்பிடுகையில் சற்றே குறைவாகும்.
அதேவேளையில், அனைத்து பாடங்களிலும் A+ பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கையானது, 2024-ஆம் ஆண்டில் 352 -ஆகப் பதிவாகியிருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் அது 376 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச கிரெடிட்டான C தரத்தை பெற்றவர்களின் எண்ணிக்கை, 2024-ஆம் ஆண்டின் 86 ஆயிரத்து 40 -இலிருந்து, தற்போது 2025-ஆம் ஆண்டில் 92 ஆயிரத்து 347 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு KSSM எனப்படும் நிலையான இடைநிலைப் பள்ளிப் பாடத்திட்டம் அறிமுகமான பிறகு, தேசிய தர மதிப்பெண் GPN அடிப்படையில், 2025-ஆம் ஆண்டில், SPM தேர்வு முடிவுகளானது, மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக கல்விப் பொது இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அசாம் அகமட் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இந்த வெற்றியை அடைய அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து தேர்வர்களுக்கும் தமது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அவர் இன்று காலை SPM தேர்வு முடிவுகள் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.








