புகைமூட்டம் நிலைமை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா பகுதிகளில் மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தேசியப் பேரிடர் நிர்வாக நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்படி, இன்று 19ஆம் தேதி சனிக்கிழமையும், நாளை 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், மேக விதைப்புக்கு ஏற்ற மேகங்கள் இருப்பதையும் வானிலை நிலைமையையும் பொறுத்தே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதன் தலைமை இயக்குநர், டத்தோ மியோர் இஸ்மாயில் மியோர் ஆகிம் தெரிவித்தார்.
தேசியப் பேரிடர் நிர்வாக நிறுவனம், மலேசிய வானிலை ஆய்வுத் துறை, மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் விமானப்படை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.
இதற்காக விமானப்படையின் சி-130 ஹெர்குலேஸ் ரக விமானம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








