மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா தனது அண்மைய நாணயக் கொள்கைக் கூட்டத்திற்குப் பிறகு, 'ஓவர்நைட் பாலிசி ரேட்' எனப்படும் ஓபிஆர் வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடு என்ற அளவிலேயே தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலையில், உலகளாவிய பொருளாதாரச் சவால்களிலிருந்து உள்நாட்டு வளர்ச்சியைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வட்டி விகிதம் 3 விழுக்காட்டிலிருந்து 2.75 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. தற்போதைய பொருளாதாரச் சூழலில் இந்த 2.75 விழுக்காடு வட்டி விகிதமே நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், விலைவாசித் தன்மைக்கும் பொருத்தமானது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வலுவான உள்நாட்டுத் தேவை மற்றும் சிறப்பான ஏற்றுமதி காரணமாக மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி நெகிழ்ச்சியுடன் உள்ளது. மேலும், ஜனவரி முதல் மே வரையிலான காலக்கட்டத்தில் நாட்டின் பணவீக்கம் சராசரியாக 1.7 விழுக்காடாகக் கட்டுக்குள் உள்ளதாகவும், மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.








