பிரிக்ஃபீல்ட்ஸ், தாமான் டேசாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் இயங்கி வந்த உலகக் கிண்ணக் காற்பந்து சூதாட்ட அழைப்பு மையத்தைக் கோலாலம்பூர் போலீஸார் இன்று காலை 11.30 மணியளவில் அதிரடியாக முற்றுகையிட்டு 11 பேரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் தென் கொரிய நாட்டவர் ஆவர். இந்தச் சூதாட்டக் கும்பல் ஜப்பான், கொரியா மற்றும் ஹாங்காங் குடிமக்களை இலக்கு வைத்து கடந்த மூன்று மாதங்களாகச் செயல்பட்டு வந்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் கனடா நாட்டவர் ஒருவரால் இந்தச் சூதாட்ட விளம்பரங்கள் பின்னணியில் இருந்து இயக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாதில் மார்சூஸ் தெரிவித்தார்.
இந்த முற்றுகையின்போது கணினிகள், மின்னணு உபகரணங்கள், ரொக்கப் பணம் மற்றும் மலேசிய மதிப்பில் சுமார் 1.3 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள கிரிப்டோகரன்சி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.








