ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.23-
பினாங்கில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்களையும், பாரம்பரிய மதிப்புமிக்க இடங்களையும் பாதுகாத்துப் பராமரிப்பதற்கு மத்திய அரசாங்கம் 4.3 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாக மாநிலச் செயலாளர் ஸுல்கிஃப்லி லோங் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ்டவுனின் பாரம்பரிய நிலைத்தன்மையை உறுதிச் செய்யும் வகையில், 10 உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் ஆய்வுகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிதி, சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சு, தேசிய பாரம்பரியத் துறை மூலம் வழங்கப்படும்.
இதில் பினாங்கு தீவு மாநகர மன்றத்துக்கு ஒன்பது திட்டங்களுக்காக 3.8 மில்லியன் ரிங்கிட்டும், George Town World Heritage Incorporated நிறுவனத்திற்கு ஒரு திட்டத்திற்காக 5 லட்சம் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
விக்டோரியா மகாராணி நினைவு கடிகாரக் கோபுரத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு 5 லட்சம் ரிங்கிட்டும், ஜார்ஜ் டவுன், Town Hall-லின் மரக் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மேம்படுத்த 4 லட்சம் ரிங்கிட்டும் செலவிடப்பட உள்ளன என்று ஸுல்கிஃப்லி லோங் தெரிவித்துள்ளார்.








