மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், சபா, சண்டக்கான், கம்போங் பஹாகியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமது தனிப்பட்ட நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த உதவி 'சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் அறக்கட்டளை' மூலம் வழங்கப்பட்டுள்ளது என்று அவரது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்ய, சபா மாநில அரசுடன் இணைந்து செயல்படுமாறு அறக்கட்டளைக்கு மாமன்னர் உத்தரவிட்டுள்ளார். "இந்தத் துயரமான சம்பவத்தில் பலர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் இந்தச் சூழலை எதிர்கொள்ளத் தேவையான மனவலிமையைப் பெற வேண்டுகிறேன்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நிகழ்ந்த இந்த கோரத் தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் எரிந்து சாம்பலாகின; 9,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.








