மலேசிய இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தரமான கல்வி, முழுமையான நலத்திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகத் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இதனை வலியுறுத்தியதாக அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்கத் துறைகளும் அடிமட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் உண்மையான தேவைகளை கண்டறிந்து, செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் உண்மையில் தேவைப்படுபவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்வார் அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், கருணை, பொறுப்புணர்வு மற்றும் நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையாலேயே நாட்டின் வளர்ச்சியில் எந்த சமூகமும் பின்தங்காமல் இருப்பதையும், அனைத்து மலேசியர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க சமமான வாய்ப்புகள் கிடைப்பதையும் உறுதி செய்ய முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.








