மலேசிய இந்திய தொழில்முனைவோருக்காக 220 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 'முத்ரா' நிதி ஒதுக்கீட்டை அறிவித்திருக்கும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் அவர்களுக்கு, மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட அந்த சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன், "இந்திய சமூகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை" என்று வர்ணித்தார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு 160 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த இந்த ஒதுக்கீடு, தற்போது 220 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது, இந்திய சமூகத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிவிடாமல் பாதுகாக்கும் அரசின் உறுதியை இது காட்டுகிறது என்றார் அவர்.
ஏற்கனவே மார்ச் 31-ஆம் தேதி வரை, 1,805 இந்திய தொழில்முனைவோர் 33.48 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியைப் பெற்று பயனடைந்துள்ளனர். தெக்குன் நேஷனல் , பேங்க் ரக்யாட், எஸ்.எம்.இ பேங்க் போன்ற ஏஜென்சிகளுடன் இணைந்து, இத்திட்டம் அடிமட்டத்திலுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களைச் சென்றடைவதை சம்மேளனம் உறுதி செய்யும் என்றும், இந்திய வணிக சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பாலமாக சம்ளேனம் செயல்படும் என்றும் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.









