கெடா மாநிலம் அலோர் ஸ்டாரில் கடத்தப்பட்ட இருவரை மீட்கும் நடவடிக்கையின் போது, போலீசாருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் வெளிநாட்டினர் என நம்பப்படும் இரு சந்தேக நபர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெலாகா பத்தா, தாமான் அமிரா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
கடத்தப்பட்ட இருவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரை நோக்கி, சந்தேக நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனையடுத்து தற்காப்புக்காக போலீசார் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோக் எம்.குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து பெரெட்டா ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் நீளமான கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 70 வயதுடைய வெளிநாட்டு ஆண் மற்றும் 30 வயதுடைய வெளிநாட்டு பெண் ஆகியோர் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இருவரின் கண்களும் கட்டப்பட்டிருந்ததுடன், கைகளிலும் விலங்கிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கெடா, பினாங்கு மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் உள்ளூர் ஆடவர் ஒருவர் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதுடன், இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மற்றும் அதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








