கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-
அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பளத் திட்டம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்ராஜெய அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் அரசு ஊழியர்களுக்கான 19 ஆவது அமானத் பெர்டானா நிகழ்வில் பிரதமர் இந்த முக்கிய அறிவிப்பை செய்யவிருக்கிறார்.
பிரதமரின் இந்த முக்கிய அறிவிப்பு, அரசாங்க ஊழியர்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்டான் எனப்படும் தேசிய பொது நிர்வாகக் கழகத்தின் துணை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் ஹனிஃப் ஜைனல் அபிடின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், பொதுச் சேவை ஊழியர்களுக்கு அறிவிக்கவிருக்கும் இனிப்பான செய்தியாக இது விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.








