முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஜைனுடினின் மனைவி புவான் ஸ்ரீ நைமா காலித், தனக்கு எதிராக வருமான வரி வாரியம் விதித்த 313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கையை ரத்து செய்யக் கோரி தொடுத்த சட்டப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்
2018-ஆம் ஆண்டிற்கான இந்த வரி விதிப்பு நோட்டீஸ், வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகார வரம்பை மீறிய செயல் என்று உயர் நீதிமன்ற நீதிபதி எவாவானி ஃபரிசிதா முகமது தீர்ப்பளித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சில சொத்துக்களை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரி விதிக்கப்பட்ட நிலையில், அந்தப் பணம் மலேசியாவிற்குள் கொண்டு வரப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் வருமான வரி வாரியம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு வருமானம் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டால் மட்டுமே அதற்கு வரி விதிக்க முடியும் என்றும், மாறாக வெளிநாட்டிலேயே இருக்கும் சொத்துகளுக்கு மலேசியாவில் வரி விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசிய நைமா காலிட், தான் எப்போதும் ஒரு பொறுப்புள்ள வரி செலுத்துவோர் என்று குறிப்பிட்டதுடன், அரசு அமைப்புகள் தங்களின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும்போது பொதுமக்கள் நம்பியிருக்கக்கூடிய உன்னத அமைப்பாக நீதித்துறை திகழ்கிறது என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.








