பட்டர்வொர்த், பிப்ரவரி.03-
கடந்த மாதம் பட்டர்வொர்த், கம்போங் ஜாவா உணவகப் பகுதியில் வீடற்ற முதியவர் ஒருவருக்குக் கடுமையான காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
குற்றம் சாட்டப்பட்ட 44 வயதுடைய எம். பிரகாஷ் என்பவரின் மனநல மதிப்பீட்டு அறிக்கையைப் பெறுவதற்காக, மாஜிஸ்திரேட் அய்னி அடிலா வரும் பிப்ரவரி 11-ஆம் தேதியைப் புதிய விசாரணைத் தேதியாக நிர்ணயித்தார்.
கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில், கம்போங் ஜாவா உணவகத்தில் 67 வயது முதியவரைத் தன்னிச்சையாகக் கடுமையாகத் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக பிரகாஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் 325 ஆவது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
கடந்த ஜனவரி 27-ஆம் தேதி வெளியான ஊடக அறிக்கைகளின்படி, தாக்குதலுக்குள்ளான முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குப் பிறகு உயிரிழந்தார்.








