அனைத்துலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றமான சூழல் காரணமாக, ஏர்ஏசியா எக்ஸ் தனது விமானக் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேபிடல் ஏ தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்டஸ், எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்படும் கூடுதல் செலவினங்களைச் சமாளிக்க, விமானச் சேவைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், கட்டணங்களைச் சீரமைக்கவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எரிபொருள் விலைக்கேற்ப பயணக் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும். எனினும், இது பயணிகளுக்குப் பெரிய சுமையாக இருக்காத வகையில் கவனமாகச் செயல்படுத்தப்படும்.
தற்போது சுமார் 10% விமானச் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பண்டிகைக் காலங்களுக்குப் பிந்தைய தேவையைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் எண்ணமோ அல்லது கட்டாய விடுப்பு அளிக்கும் திட்டமோ இல்லை என ஏர்ஏசியா எக்ஸ் குழும சிஇஓ போ லிங்கம் உறுதி அளித்துள்ளார்.
விமானப் பயணக் கட்டணங்களை மட்டுமே நம்பியிருக்காமல், 'டெலிபோர்ட்' மூலம் சரக்கு போக்குவரத்து சேவையை வலுப்படுத்தவும், டிஜிட்டல் தளங்கள் வாயிலாக வருவாயைப் பெருக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜூன் மாதம் பஹ்ரைனுக்கான புதிய விமானச் சேவையைத் தொடங்குவதில் நிறுவனம் உறுதியாக உள்ளது.








