பத்து பஹாட், டிசம்பர்.28-
ஜொகூர், தஞ்சோங் லாபோ பகுதியில் சுமார் 18.3 மில்லியன் ரிங்கிட் செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் UTHM எனப்படும் மலேசிய துன் ஹுசேன் ஓன் பல்கலைக்கழக விமான நிலையம், வரும் 2026 ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே தனக்கெனத் தனி கடல்சார் விமான நிலையத்தைக் கொண்ட முதல் பல்கலைக்கழகம் என்ற வரலாற்றுப் பெருமையை இதன் மூலம் UTHM பல்கலைக்கழகம் தட்டிச் செல்லவுள்ளது எனக் கூறினார் ஜோகூர் மாநில பொதுப் பணி, போக்குவரத்து, உட்கட்டமைப்பு, தொடர்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முஹமட் ஃபஸ்லி முஹமட் சால்லே.
800 மீட்டர் ஓடுபாதையுடன் 12 மீட்டர் உயரக் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் அமையவிருக்கும் இந்தத் தளம், விமானிகளை உருவாக்குவதுடன் மட்டுமல்லாமல், சொகுசுச் சுற்றுலாப் பயணிகளுக்கான கடல் விமானச் சேவையையும் வழங்கவுள்ளது. தஞ்சோங் லாபோ பகுதியை "மலேசியாவின் தெற்கு மாலத்தீவு" என வர்ணித்துள்ள முஹமட் ஃபஸ்லி, இந்தத் திட்டம் ஜொகூர் மாநிலத்தின் புதிய அடையாளமாகவும், பொருளாதாரப் புரட்சியாகவும் அமையும் எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.








