கோலாலம்பூர், மார்ச்.14-
வன்முறையைத் தூண்டும் கருத்துக்களைக் கூறியதற்காக நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு மத்தியில், தாம் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று விட்டதாகக் பரவும் தகவலை சமய போதகர் ஸம்ரி வினோத் மறுத்துள்ளார்.
இன்று சனிக்கிழமை, ஸம்ரி வெளியிட்டுள்ள முகநூல் பதிவு ஒன்றில், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல தமக்கு எந்த ஒரு காரணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும், அவசியம் ஏற்பட்டால், மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயிலை நேரில் சந்திக்கத் தயார் என்றும் ஸம்ரி குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், தீ வைப்பு மற்றும் வீடுகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களில் தன்னைக் குறி வைத்து தாக்குதல் நடத்துவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்முறையைத் தூண்டியதாகக் குற்றச்சாட்டு உள்ள பலர் மீது, இது போன்ற நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்றும், அவர்கள் மீதும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஸம்ரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று இரவு காலிட் இஸ்மாயில் வெளியிட்ட தகவலில், ஸம்ரி வினோத்தும், தமிம் டாஹ்ரியும் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








