சிரம்பான், ஜூலை.15-
நெகிரி செம்பிலான் மாநில மனித வள இலாகாவின் ஏற்பாட்டில் மாநிலத்தில் உள்ள 35 தோட்டங்களின் நிர்வாகிகளுடன் இன்று சந்திப்பு நடைபெற்றது.

போர்ட்டிக்சன், கோல்ஃப் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு நிகழ்வில் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செயலாளர் P. சாந்தகுமார் மற்றும் அவரின் பொது உறவுத் துறை உதவியாளர் ரோபார்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வீட்டு வசதிகள், தூய்மையான குடிநீர் விநியோகம், உள்ளூர் தொழிலாளர்களை அதிகளவில் வேலைக்கு சேர்த்தல் முதலிய அம்சங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

நெகிரி செம்பிலான் மாநில மனித வள இயக்குநர் ரோஸ்லான் தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் தோட்டத் தொழில் துறையில் அதிகமான உள்ளூர் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட வேண்டிய அவசியத்தை தோட்டத் தொழிற்சங்கத்தின் நெகிரி செம்பிலான் செயலாளர் P. சாந்தகுமார் வலியுறுத்தினார்.

தவிர தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கும், மாபா (MAPA) எனப்படும் தோட்ட முதலாளிமார்கள் சங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டுச் சம்பள ஒப்பந்தம் தொடர்பான மகஜரையும் ரோஸ்லானிடம் சாந்தகுமார் ஒப்படைத்தார்.

கடந்த ஜுலை 6 ஆம் தேதி நடைபெற்ற தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பிரதிநிதிகள் மாநாடு மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது குறித்து இக்கூட்டத்தில் ரோஸ்லான் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.
தோட்டத் தொழிலாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட தோட்டத் தொழிற்சங்கம் மிகவும் கட்டுக்கோப்பாக நடத்தப்பட்டு தொழிலாளர்களின் அடிப்படை விவகாரங்கள் பேசப்பட்டது தமது கவன ஈர்ப்பாக மாறியது என்று ரோஸ்லான் புகழ்ந்துரைத்தார்.

முதலாளிமார்கள் சங்கத்தின் பிரதிநிதியாக புவான் சொஃப்பான் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தோட்டத் தொழிலாளர் நலன் சார்ந்த விவகாரங்களும் முக்கியமாகப் பேசப்பட்டது.








