நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்தில் ஒரு கும்பலிடையே ஏற்பட்ட மோதலுக்குத் தவறான புரிதலே காரணம் என நம்பப்படுகிறது. இரவு 9.40 மணியளவில் மூன்று நபர்கள் புகார் அளிக்க போலீஸ் நிலையம் வந்தபோது, அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட மற்றொரு கும்பலுக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது, ஐந்து பேர் கொண்ட கும்பலில் இருந்த ஒரு நபர் புகார்தாரரை இரும்புத் தடியால் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் போலீஸ் நிலையத்திற்குச் சொந்தமான தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் சேதமடைந்தது. தாக்குதலுக்குப் பிறகு அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த வட கிள்ளான் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், 28 முதல் 41 வயதுக்குட்பட்ட ஐந்து உள்ளூர் ஆண்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.எஸ்.பி. எஸ். விஜய ராவ் தெரிவித்துள்ளார்.








