சிரம்பான், நவம்பர்.22-
கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் சிரம்பான் நுசாரி பிஸ் செண்டாயானில் உள்ள ஒரு உணவகம் அருகே ஓர் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசாரின் விசாரணையில் உதவுவதற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
32 மற்றும் 29 வயதுடைய அந்த இரண்டு நபர்களை வரும் நவம்பர் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார், மாஜிஸ்திரேட் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் 302 மற்றும் 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டம் ஆகியவற்றின் கீழ் இரு நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி மற்றும் வெட்டுக்கத்தியை ஆயுதமாகக் கொண்ட முகமூடி அணிந்த நபர்கள் 33 வயதுடைய அந்த இந்திய ஆடவரை வெட்டியதுடன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அந்த ஆடவருக்கு ஒரு கைத்துண்டாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக இதற்கு முன்பு ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
சுட்டுக் கொல்லப்பட்ட நபர், கொள்ளையடித்தல், வீடு புகுந்து திருடுதல், அடித்துக் காயம் விளைவித்தல் உட்பட 42 குற்றப்பதிவுகள் கொண்டுள்ளதாக போலீஸ் துறை தெரிவித்தது.








