மூவார், நவ.8-
ஜோகூர், மூவார் வட்டாரத்தில் சட்டவிரோதமாக வட்டிக்கு பணம் கொடுத்து, ஆ லோங்காக செயல்பட்ட 6 வங்காளதேச வட்டிமுதலைகளை போலீசார் வளைத்துப்பிடித்தனர்.
26 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த வங்காளதேசிகள், தற்போது வட்டி முதலைகளாக செயல்படுகின்றனர் என்று கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து போலீசார் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அந்த அறுவரும் பிடிபட்டனர் என்று மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.
அந்த ஆறு வங்காளதேச வட்டி முதலைகளிடம் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பலதரப்பட்ட வகையைச் சேர்ந்த 7 கைப்பேசிகள், ஆ லோங்- கிற்கே உரிய அடையாளமான தோளில் மாட்டப்படும் 5 கைப்பைகள், பல்வேறு நபர்களுக்கு சொந்தமான 187 ஏ.டி.எம். கார்டுகள், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 250 ரிங்கிட் ரொக்கப்பணம் முதலியப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மூவார் வட்டாரத்தில் வங்காளதேசத் தொழிலாளர்களை இலக்காக கொண்டு அவர்கள் வட்டி முதலைகளாக செயல்பட்டு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக முக்லிஸ் அஸ்மான் மேலும் விவரித்தார்.








