கோலாலம்பூர், அக்டோபர்.02-
காஸாவிற்கான மனிதாபிமானப் பொருட்களை எடுத்துச் சென்ற Global Sumud Flotilla கப்பல், இஸ்ரேல் இராணுவத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்ட தன்னார்வலர்களில் 23 மலேசியர்களும் அடங்குவர் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலிய இராணுவத்தின் இந்த தன்மூப்பான நடவடிக்கையைப் பிரதமர் கடுமையாகச் சாடினார். இவ்விவகாரம் தொடர்பாக கட்டார் பிரதமர் Shikh Mohammed Abdul Rahman Al Thani, துருக்கி அதிபர் Recep Tayip Erdogan ஆகியோரைத் தொடர்பு கொண்டு விவரத்தைத் தாம் தெரியப்படுத்தியிருப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
நிவாரணப் பொருட்களுடன் Global Sumud Flotilla கப்பலில் பயணம் செய்த உலக முழுவதிலும் உள்ள இதர நாடுகளைச் சேர்ந்த தன்னார்வாலர்களுடன் 23 மலேசியர்களும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்தது முதல் கட்டார் பிரதமர், துருக்கி அதிபர், எகிப்து அதிபர் Abdel Fattah El- Sisi- யுடன் தாம் தொடர்பு கொண்ட வண்ணம் இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் இராணுத்தினால் சிறைப்பிடிக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதை உறுதிச் செய்ய இவ்விவகாரத்தில் தலையிடுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Marco Rubio உட்பட இதர நாடுகளில் சகாக்களைக் கேட்டுக் கொள்ளுமாறு மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசானைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இதனிடையே அனைத்துலக செய்தி நிறுவனங்களின் தகவலிபடி, அந்த Global Sumud Flotilla கப்பலில் 44 நாடுகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இருந்ததாகத் தெரிவித்துள்ளது. அதே வேளையில் அனைத்துலக கடல் பிராந்தியத்தில் கப்பல்களைச் சிறைப்பிடித்து இருக்கும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பல நாடுகள் கண்டித்துள்ளன.
இதற்கு முன்பு இது போன்ற நிவாரணக் கப்பல்களை வழிமறித்த இஸ்ரேலிய படைகள், போர் மண்டலத்திற்குள் நுழைத்து விட்டதாக எச்சரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








