ஷா ஆலாம், பிப்ரவரி.04-
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வங்கி ஒன்றில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தின் போது துப்பாக்கியால் சுட்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர், ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டார்.
1971 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட சியா கோங் வீ என்ற அந்த விரிவுரையாளர், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுன் 3 ஆம் தேதி ஷா ஆலாம் கிளென்மேரியில் உள்ள வங்கியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் மாலை 3.50 மணியளவில் முகமூடி அணிந்து வங்கிக்குள் நுழைந்த சியா கோங் வீ, பாதுகாப்பு அதிகாரியைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, மேற்கூரையை நோக்கி முதல் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார்.
மேலும் வங்கியில் இருந்த வாடிக்கையாளர்களைத் தரையில் படுக்கச் சொல்லி மிரட்டி, அதிகாரிகளிடமிருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 220 ரிங்கிட்டை அந்த முன்னாள் விரிவுரையாளர் கொள்ளையடித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2022 மார்ச் 3 ஆம் தேதி போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் சியா கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து Walther P99 99 ரகத் துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், கொள்ளைச் சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த ஜாக்கெட் அவரது காரிலிருந்து மீட்கப்பட்டது. இன்றைய ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பு வரும் பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.








