புக்கிட் காயு ஹீத்தாம், ஜூன்.14-
புக்கிட் காயு ஹீத்தாமில், போலி ஹலால் சான்றிதழைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 26 டன்களுக்கும் அதிகமான உறைந்த கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி முகவர் சமர்ப்பித்த ஹலால் சான்றிதழில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படைத் தளபதி ஃபௌஸி யுசோஃப் தெரிவித்துள்ளார்.
சான்றிதழில் இடம் பெற்றிருந்த விவரங்கள், அதிகாரப்பூர்வ கணினி அமைப்பில் பதிவாகியிருந்த தகவல்களுடன் பொருந்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவை அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஹலால் சான்றிதழ்கள் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதையடுத்து, அந்த வாகனமும், அதிலிருந்த உறைந்த கோழி இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.








