கோலாலம்பூர், ஜூன்.14-
கோலாலம்பூரின் செத்தாபா செண்ட்ரல் பகுதியில் மடிக்கணினி பை ஒன்றை நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் 11-ஆம் தேதி புகார் பெறப்பட்டதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் அன்னாஸ் சுலைமான் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பொருட்கள், பணம் மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் இருந்த அப்பையை நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபரை அடையாளம் காணவும், கைது செய்யவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








