கோலா திரங்கானு, ஜூன்.14-
திரங்கானுவில் உள்ளூர்வாசிகளிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்படும் தனியார் வாகனங்களை, வெளிநாட்டவர்கள் சிலர், பயணிகள் வாகனச் சேவையாகப் பயன்படுத்தி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஜூன் 1 முதல் இன்றைய தேதி வரை, திரெங்கானு மாநில சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே மேற்கொண்ட ஓப்ஸ் பேவா என்ற அதிரடிச் சோதனையின் போது, பல்வேறு சட்ட மீறல்களுக்காக 114 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 559 சம்மன்களும் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து அம்மாநில ஜேபிஜே இயக்குநர் முஹமட் ஸம்ரி சமியோன் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட 114 வாகனங்களில் 93 வாகனங்கள் ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த ஓட்டுநர்களுடன் தொடர்புடையவை என்று தெரிவித்துள்ளார்.
அவர்கள் உள்ளூர்வாசிகளிடம் இருந்து வாடகைக்கு பெற்ற தனியார் வாகனங்களை பயன்படுத்தி, சட்டவிரோதமாக இந்த சேவைகளை வழங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து அம்மாநிலத்தில் தனியார் வாகனங்களை வாடகைக்கு விடும் முதலாளிகளிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.








